திருகோணமலையில், 17 வயது இளைஞனின் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 15 வயதான மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்போபுர, பெரமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய கவிஷா பத்தரண என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது காதலன் என கருதப்படும் 17 வயதான சமீர வீரசிங்க என்பவரே கத்திக்குத்து தாக்குதலை நடத்தினார்.
கந்தளாய், அக்போகம பகுதியை சேர்ந்த இந்த இளைஞன், காதல் தகராறையடுத்து மாணவியை குத்திக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 1ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், மாணவியின் வீட்டில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவத்தின் போது, மாணவியின் தாயாரும் வீட்டிலிருந்தார்.
சந்தேகநபர் வீட்டில் பதுங்கியிருந்துவிட்டு, கத்திக்குத்தை நடத்தியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
படுகாயமடைந்த மாணவி கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கடந்த 4ஆம் திகதி மேலதிக சிகிச்சைகளிற்காக கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, இடைவழியிலேயே உயிரிழந்தார். அவரது சடலம் தற்போது தம்புள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞன் கந்தளாய் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை,மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தளாய் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லையென்றும், தம்புள்ளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விசனம வெளியிட்ட உறவினர்கள், முறையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலத்தை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.