மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பு இன்றைக்கு மட்டுமே போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் தீர்ந்துவிடும் என இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக மின் நிலையத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் இன்றைய தேவையை பூர்த்தி செய்யும் என நவமணி தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க நேற்று வெளியிட்ட அறிக்கையில், மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதால் நாளை வரை மின்வெட்டு விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜெனரேட்டர்களை தேசிய மின் கட்டத்துடன் ஒருங்கிணைக்க ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளதாக PUCSL தெரிவித்துள்ளது.
சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஜெனரேட்டர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வசம் இருப்பதாக ரத்நாயக்க கூறினார்.
கொழும்பில் 10 இடங்களில் மட்டும் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஜெனரேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.
மின் நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக PUCSL தலைவர் கூறினார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் பேராசிரியர் ரொஹந்த அபேசேகர இன்று தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.