ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் ஒரு குடும்பத்தையோ, ஒரு தலைமுறையையோ, உறவினர்களையோ, நெருங்கிய நண்பர்களையோ பாதுகாக்கும் அரசியல் அல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதுகாக்கும் அரசியல் இயக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 1.8 மில்லியன் நெல் விவசாயிகள் மற்றும் தோட்ட விவசாயிகளை அரசாங்கம் தன்னிச்சையாக அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், உரம், எரிவாயு, சீனி, அரிசி மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசாங்கமே தரக்குறைவாக உள்ளது என்றும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் படையின் கேகாலை மாவட்ட சபைக் கூட்டம் நேற்று (22) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
கல்வி, அரசியல், பொருளாதாரம், சமூகம், சுகாதாரம், கலாசாரம் மற்றும் சமய ரீதியில் இளைஞர்களை வலுவூட்டுவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் எனவும் இளைஞர்களை வழிநடத்த தனது அரசாங்கத்தின் கீழ் ஆலோசனைக் குழுவொன்று அமைக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். .
நாட்டு மக்களின் பொதுச் சொத்துக்களை நிபந்தனையின்றி சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அதனை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரே கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தமது பேராசைக்காக மக்களின் சொத்துக்களையும் பணத்தையும் கொள்ளையடித்து தமது பாக்கெட்டை நிரப்பும் யுகம் நிச்சயமாக முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது எதிர்கால அரசாங்கத்தின் நிலையான கொள்கை எனவும் தெரிவித்தார்.
கடந்த 7 வருடகால பொறுப்பற்ற ஆட்சியில் அழிக்கப்பட்ட நாட்டை மீளக் கட்டியெழுப்ப பாரிய புரட்சியை முன்னெடுப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த நாட்டில் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் தான் எப்போதும் கவனம் செலுத்தியதாகவும் எதிர்கால இளைஞர் வேலைத்திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் இளைஞர் சாசனத்தை ஜனாதிபதி தேர்தலின் போது வெளியிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.