இலங்கைக்கு இந்தியா அளிக்கும் நிதியுதவியின் கீழ் பலாலி விமான நிலையத்தை புனரமைத்து, செயற்பட வைக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளே, நேற்று இந்த தகவலை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
13வது திருத்தத்தை வலியுறுத்தி பிரதான தமிழ் கட்சிகள் அனைத்தும் கையெழுத்திட்ட ஆவணம், இந்திய தூதரிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இதன்போதே, இந்திய தூதர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
நேற்றைய சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடந்தது. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, பலாலி விமான நிலையத்தை மீண்டும் செயற்படுத்த வேண்டுமென தமிழர் தரப்பினர் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த இந்திய தூதர், ‘இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய அவசர நிதியுதவியளிக்கிறது. இந்த நிதியின் கீழ் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரித்து, விமான நிலையத்தை மீள இயங்க வைக்க வேண்டுமென இந்தியா தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் இலங்கை இன்னும் எமக்கு பதிலளிக்கவில்லை. எனினும், அதனை நிறைவேற்ற நாம் அழுத்தம் கொடுப்போம்’ என தெரிவித்தார்.