அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞனை காதலித்த பாகிஸ்தான் பின்னணியுடையை யுவதியை ஆணவக்கொலை செய்ய முயற்சித்த, குடும்பத்தினர் பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 வயதுடைய யுவதியின் வயிற்றில் பெரிய சமையலறைக் கத்தியால் பலமுறை குத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு நேற்று அடிலெய்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
கடந்த நவம்பர் 30ஆம் திகதி செஃப்டன் பிளாசா ஷொப்பிங் சென்டர் கார் பார்க்கிங்கில் இந்த கொலைவெறிச் சம்பவம் நடந்தது. கத்திக்குத்து தாக்குதலால் சிறுநீரகம் துளையிடப்பட்டு, கல்லீரல் சிதைந்ததுடன், குறிப்பிடத்தக்க உள் இரத்தப்போக்கால் யுவதி பாதிக்கப்பட்டார். அவர் தற்போது பாதுகாப்பு இல்லமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட், பிளேர் அத்தோல் பிரதேசத்தில் வசித்துவந்த – பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட 21 வயது முஸ்லிம் யுவதி ஒருவர், இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட கிறிஸ்தவ இளைஞரைக் காதலித்தார். இருவரும் ஒன்றாகக் கல்விகற்ற பல்கலைக்கழகத்தில் இந்தக் காதல் ஏற்பட்டது.
எனினும், யுவதி 17 வயதில் வடக்கு பாகிஸ்தானில் உள்ள தனது மச்சானுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை இளைஞனுடனான காதலை, யுவதியின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். இதனையடுத்து, குறிப்பிட்ட யுவதி வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனுடன் வசிப்பதற்காகச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி, குறிப்பிட்ட யுவதி பொதுவான இடமொன்றில் தனது தாயாரை சந்திக்கச் சென்றுள்ளார். அடிலெய்ட் செஃப்டன் பிளாசா ஷொப்பிங் சென்டர் கார் பார்க்கிங் பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறுவதற்கு ஏற்பாடானது.
காலை 7.45 அளவில் யுவதியின் காதலர், Sசெஃப்டன் பிளாசா ஷொப்பிங் சென்டர் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது காதலியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
குறிப்பிட்ட யுவதி தனது தாயாருடனும் சகோதரியுடனும் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களை விட்டுப் போகவேண்டாம் என்று அவரது சகோதரி, கைகள் இரண்டையும் இறுக்கிப் பிடித்துள்ளார்.
அதுவரைக்கும் அங்கு பதுங்கியிருந்த, யுவதியின் தந்தை, சகோதரன், மச்சான் ஆகியோர் திடீரென்று அங்கு வந்து, யுவதியை இழுத்துத் தமது சிவப்பு ஹோல்டன் குரூஸ் காரில் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள்.யுவதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, யுவதியின் வயிற்றில் பெரிய சமையல் கத்தியால் சரமாரியாகக் குத்தி, காருக்குள் தள்ளி, தங்களது வீட்டுக்குக் கொண்டுபோனார்கள்.
“எந்த நேரத்திலும் அவர்களில் யாரும் ஆம்புலன்ஸை அழைக்கவில்லை,” என்று சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
“அதிர்ஷ்டவசமாக, அவளுடைய காதலனிற்கு ஒரு நண்பன் தகவல் வழங்கினார். காதலன் காவல்துறையை அழைத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், அந்த வீட்டு முகவரிக்கு ஆம்புலன்ஸை அழைத்தனர்.” என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில், குறிப்பிட்ட யுவதியின் தந்தை, தாய், சகோதரி, சகோதரன், மச்சான் ஆகிய ஐவர் மீதும் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த சம்பவம் நடப்பதற்கு நாட்களின் முன்னர், யுவதியின் சகோதரர்கள் இருவர், காதலனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அத்துடன், யுவதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற சமயத்தில், யுவதியின் வங்கிக்கணக்கிலிருந்த பணம் எடுக்கப்பட்டு விட்டது.
சந்தேகநபர்கள் ஐந்து பேரின் மனு கோரிக்கையை தலைமை மாஜிஸ்திரேட் மேரி-லூயிஸ் ஹிரிபால் நிராகரித்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று கூறினார்.
குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்கள் மீதான விசாரணையும் மீண்டும் மார்ச் மாதம் இடம்பெறும்.



