காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரியை கத்தியால் குத்தி, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தப்பியோடிய பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த வட பரவூர் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
வட பரவூர் பகுதியில் உள்ள வீட்டில் யுவதியொருவர் எரிந்த நிலையில் சடலமாக காணப்படுவதாக செவ்வாய்க்கிழமை (28) மாலை 3 மணியளவில் பொலிசாருக்கு தகவல் சென்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சிவானந்தன் – ஜிஜி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் விஸ்மயா (25), இளைய மகள் ஜித்து (22). சம்பவம் நடந்த அன்று தாய் தந்தை இருவரும் வைத்தியசாலைக்கு சென்றுவிட்டனர். இளைய மகள் ஜித்து மனநலம் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வருவதால் அவரது கை, கால்களை கட்டிவிட்டு ஒரு கதிரையில் அமர வைத்துவிட்டு, மூத்த மகளின் கட்டுப்பாட்டில் சகோதரியை விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர், மூத்த மகள் விஸ்மயா உடல் கருகி சடலமாக கிடந்துள்ளார். இளைய மகள் மாயமாகியிருந்தார்.
மேலும், வீட்டின் பின்வாசல் வழியே இரத்த கரை இருந்ததால், போலீசாருக்கு ஜித்து மீது சந்தேகம் ஏற்பட்டது.
சகோதரியை கொலை செய்துவிட்டு அவர் தப்பி ஓடிருக்கலாம் என்ற கோணத்தில் பரவூர் காவல்துறை லுக்அவுட் நோட்டிஸ் வெளியிட்டது. மேலும், ஜித்து வீட்டை விட்டு வெளியே செல்லும்போது விஸ்மயாவின் செல்போனை எடுத்து சென்றுள்ளார்.
ஜித்துவின் காதல் விவகாரத்திற்கு விஸ்மயா எதிர்ப்பு காட்டியதும், அதனால் காதல் முறிந்ததும், அக்கா மீது ஜித்து கோபத்தில் இருந்ததும் பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
எப்படி சிக்கினார் ஜித்து?
எர்ணாகுளம் நகரின் மையப் பகுதியில் உள்ள மேனகா சந்திப்பு அருகே இரவில் தனிமையில் இருந்த இளம் பெண்ணைப் பார்த்த பொலிசார், வீட்டை விட்டு ஓடிய இளம் பெண்ணொருவர் என்றுதான் முதலில் கருதினர். பொலிசார் விசாரித்த போது, அந்த பெண்ணும் முரண்பாடாக பேசினார்.
காக்கநாட்டில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள “தெரு வெளிச்சம்” என்ற தங்குமிடத்திற்கு போலீசார் அந்த யுவதியை அழைத்துச் சென்றனர். முதலில், தான் லட்சத்தீவைச் சேர்ந்தவர் என அந்த யுவத சொன்னார். காலையில் லட்சத்தீவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தும், அவரை அடையாளம் காண முடியவில்லை.
வியாழக்கிழமை மதியம்தான் அந்த நபர் குறித்த தகவல் பரவூர் போலீஸாருக்கு கிடைத்தது. விஸ்மயா வழக்கு பற்றி எதுவும் தெரிவிக்காமல், அந்த தங்குமிடத்தை நடத்தும் முருகனிடம், சம்பவ இடத்திற்கு வரும் வரை யுவதியை அங்கேயே தடுத்து நிறுத்தும்படி கூறினர்.
ஜித்து தனது ஆண் நண்பருடன் செல்ல விரும்புவதாக கூறியதால் முருகனும் அவரது அணியினரும் உஷார் நிலையில் கவனித்து வந்தனர். உடனடியாக தன்னை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் முருகன் அவரை சமாதானம் செய்து இன்னும் சிறிது நேரம் அங்கேயே இருக்கச் சொன்னார்.
பரவூர் போலீஸார் தங்கும் இல்லத்துக்கு வந்ததை கண்டதும், ஜித்து திகைத்து போனாலும், வேறு வழியில்லாமல் கடைசியில் போலீசாருடன் சென்றார்.
இதற்குள் விஸ்மயாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தீக்காயங்களால் இறந்ததாக தெரியவந்தது.
ஜித்துவின் வாக்குமூலம்
பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜித்து விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து நடந்தவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் பெற்றோர் வெளியில் சென்று விட்டனர். அப்போது, ஜித்து அக்காவுடன் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரது கை, கால்களை அவிழ்த்துவிடுமாறு விஸ்மயாவிடம் ஜித்து கூறியுள்ளார். விஸ்மயா மறுக்க, ஜித்த கத்தி கூச்சலிட, வேறு வழியின்றி அவிழ்த்து விட்டுள்ளார்.
கயிற்றை அவிழ்த்த பின்னர், ”உன்னால்தான் எனது காதல் கைகூடாமல் போய்விட்டது” என கூறி விஸ்மயாவிடம் ஜித்து சண்டையிட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து விஸ்மயாவை ஜித்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், உடலில் மண்ணெணெய் ஊற்றி கொளுத்திவிட்டு தப்பியது தெரிய வந்தது.
எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் லுக்அவுட் நோட்டீசும் வெளியிட்டனர்.
இந்த நிலையிலேயே, புதன்கிழமை ஜித்து கைதானார்.
ஜித்துவிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஜித்து ஏற்கனவே மனநிலை பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்காவை கொலை செய்துள்ளார். இதனால் வழக்கை கையாளுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.