தமிழ் மொழி பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் இன்று (21) கொழும்பில் கூடுகிறார்கள். இன்று கூட்டு ஆவணமொன்றில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக – முழுமையான அதிகார பரவலாக்கலுடன், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு திட்டமொன்றை அமுல்ப்படுத்த வேண்டுமென்றும், அது அமுலாகுவதற்கு இடையில்- உடனடியாக, இடைக்கால ஏற்படாக – 13வது திருத்தத்தை முழுமையாக உடன் அமுலாக்க வேண்டுமென கோரும் கூட்டு ஆவணமொன்றில் தமிழ் மொழி பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் இன்று கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கூட்டத்திலேயே இந்த ஆவணத்தில் கையெழுத்திட திட்டமிடப்பட்டிருந்த போதும், சாக்குபோக்கு சொல்லி, இரா.சம்பந்தன் அதை தவிர்த்து விட்டார்.
இதையடுத்த, இன்று மீண்டும் கூட்டம் இடம்பெறுகிறது.
இன்று தமிழ் அரசு கட்சி ‘ஒரு கூட்டமாக’ அங்கு செல்கிறது. இதுவரை கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
ஏற்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் அதன் ஒழுங்குகளை கவனிக்க, ரெலோ தரப்பிலிருந்து ஒருவர் அல்லது இருவர் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த கூட்டத்தில் ரெலோவின் அதிக பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாக, எம்.ஏ.சுமந்திரனின் சமூக ஊடகப்பிரிவினரால் ஒரு தகவல் பரப்பப்பட்டிருந்தது. எனினும், அது உண்மையல்ல.
இன்று, கட்சி தலைவர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ள நிலையில், அழைக்கப்படாத விருந்தாளியாக எம்.ஏ.சுமந்திரன் நுழையவுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
பபம்பலப்பிட்டியிலுள்ள குளோபல் டவர் ஹொட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ஒருவேளை இன்றும் தமிழ் அரசு கட்சி நழுவ முயன்றால், தமிழ் அரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கையெழுத்திட்டு, ஆவணத்தை இறுதி செய்ய வாய்ப்புள்ளது.