பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டவர்கள் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிரதிவாதிகள் 5 இலட்சம் ரூபா சரீரரப்பிணையில் விடுவிக்கப்பட்டள்ளனர்.
32 பேருக்கு எதிராக பொத்துவில் நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமைக்கு எதிராக, பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தில், பொத்துவில், திருக்கோவில் பொலிசாரால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சி அங்கத்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உறுப்பினர்கள் என 32 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த வழக்கில் இன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்கள்பு மாநகரசபை உறுப்பினர்,தி.சரவணபவன், தமிழரசு கட்சி உறுப்பினர் சயநொளிபவான், இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி்தலைவர் கி.சேயோன், வாலிபர் அணி உப்செயலாளர் நிதரன்சன், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி திருமதி செல்வராணி, பிரதேச சபை உறுப்பினர் பிரதீபன் ஆகிய 9 பேர் இன்று முன்னிலையாகியிருந்தனர்.
ஏனையோருக்கு முறைப்படி அழைப்பாணை கிடைக்கவில்லை.
பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி முனாஸ்டீன் முன்னிலையாகினார்.
பிரதிவாதிகள் 9 பேரையும் தலா 5 இலட்சம் ரூபா சரீரரப்பிணையில் நீதிவான் விடுவித்தார்.
வழக்கு எதிர்வரும் 2022, மார்ச்,02ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, பிரதிவாதிகள் அனைவருக்கும் அழைப்பாணை வழங்கி, அனைவரையும் முன்னிலையாக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.