நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்திற்காக மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும், இன்று பகல்12.30 மணியளவிலேயே சபை அமர்வுகள் முடிந்து விட்டன.
நாடாளுமன்ற சம்பிரதாயப்படி வாக்கு வெட்டு பிரேரணை (cut Motion) சமர்ப்பிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்காமையினால், நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறவில்லை.
நாடாளுமன்றத்திற்குள் தமது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் இன்றும் நாடாளுமன்றத்திலிருந்த வெளிநடப்பு செய்தனர்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 11ஆம் நாள் விவாதம் இன்று இடம்பெறவிருந்தது.
நகர அபிவிருத்தி, வீடமைப்பு, சுற்றுலா அமைச்சுக்கள் மற்றும் நகர அபிவிருத்தி, கழிவு அகற்றல் மற்றும் சமூக தூய்மை, கிராமப்புற வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தொழில்கள், தோட்ட வீட்டுவசதி மற்றும் சமூக உள்கட்டமைப்பு, கடற்கரை பாதுகாப்பு மற்றும் தாழ்வான மேம்பாடு மற்றும் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி மண்டலங்கள் மேம்பாடு இராஜாங்க அமைச்சுக்களின் மீதான செலவுகள் குறித்து இன்று விவாதிக்கப்படவிருந்தது.
பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடும் என்றும், விவாதம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்ததால், விவாதம் இடம்பெறவில்லை.
எதிர்க்கட்சி வரிசையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் இருந்தனர். எனினும், நாடாளுமன்ற சம்பிரதாயப்படி அவர்களால் விவாதத்தை நகர்த்த முடியாது.
நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி, வரவு செலவு திட்ட விவாதத்தின் முன்னரே, நடவடிக்கைக்குழு கூட்டத்தில் cut Motion சமர்ப்பிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யார் என்ற விபரம் தீர்மானிக்கப்பட்டு விடும்.
எதிர்க்கட்சிகளிற்குள் கலந்துரையாடல் நடத்தி, எதிர்க்கட்சி பிரதம கொரடா, cut Motion சமர்ப்பிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விபரத்தை சமர்ப்பிப்பார். அவர்களே, ஒவ்வொரு அமைச்சுக்களின் விவாதத்தின் போதும், cut Motion சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பிப்பர்.
நாடாளுமன்ற சம்பிரதாயப்படி, cut Motion சமர்ப்பித்த பின்னரே விவாதங்கள் இடம்பெறும். அது சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் விவாதம் இடம்பெறாது. ஆளும் தரப்பிற்கு வசதியாக அமைந்து விடும்.
இம்முறை cut Motion சமர்ப்பிக்கும் உறுப்பினர்கள் என 20 பேர் பட்டியலிடப்பட்டிருந்தனர். தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 17 உறுப்பினர்களும் பெயரிடப்பட்டிருந்தனர். எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாரும் பெயரிடப்படவில்லை.
இன்று ஐக்கிய மக்கள் சக்தியினர் வெளிநடப்பு செய்து விட்டனர். பெயரிடப்பட்ட ஜேவிபி உறுப்பினர்களும் சபைக்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.
இதனால், சம்பிரதாயப்படி விவாதத்தை நடத்த முடியாத சூழல் எழுந்தது.
வரவு செலவு திட்டத்தில் இன்றைய நாளுக்குரிய அமைச்சர்கள் திருத்தங்களை சமர்ப்பித்து உரையாற்றியதுடன், இன்றைய சபை அமர்வுகள் மதியத்துடன் முடிந்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்திற்கு செல்பவர் எம்.ஏ.சுமந்திரன். வாக்குவெட்டு பிரேரணைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்ட போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெயரிடப்படாத நிலைமை ஏன் ஏற்பட்டது என்ற கேள்வியெழுந்துள்ளது.
சுமந்திரன் தெரியாமல் இந்த விடயம் நடந்ததா அல்லது திட்டமிட்டே நடந்ததா என்ற சந்தேகம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் எழுந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய நிலைமை ஊரறிந்தது. எத்தனை குரூப் உள்ளே உள்ளதென யாருக்கும் தெரியாது. நாடாளுமன்றத்தில் உரையாற்ற நேரம் ஒதுக்குவதில் கூட நிறைய பிடுங்குப்பாடு. தமது குரூப் ஆட்களிற்கே அடிக்கடி நேரம் ஒதுக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இப்படியான பின்னணியில், அமெரிக்க பயணத்தை தொடர்ந்து தனிப்பட்ட பயணமாக பிரித்தானியா, கனடாவிற்கு சுமந்திரன், சாணக்கியன் சென்றனர். வவு செலவு திட்ட விவாதங்களில் அனேகமாக கலந்து கொள்ள மாட்டோம் என்பது தெரிந்ததால், ஏனைய யாருக்கும் வாய்ப்பளிக்கக்கூடாதென்பதற்காகவே திட்டமிட்டு, கூட்டமைப்பினரின் பெயர்கள் தவிர்க்கப்பட்டதா என்ற சந்தேகம் இப்பொழுது கூட்டமைப்பின் எம்.பிகளிற்கிடையிலேயே எழுந்துள்ளது.