வடக்கு ஆளுனர் அலுவலகத்திற்குள் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தனது முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கலந்துரையாடல் மண்டபத்தை விட்டு வெளியேற முடியாதென ஆளுனர் குறிப்பிட்டதாக, தொழிற்சங்க பிரதிநிதிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தூர சேவை பேருந்துகளை இயக்குவது தொடர்பிலான சர்ச்சை பற்றி கலந்துரையாட இ.போ.ச கோரியிருந்தது.
இதன்படி, வடக்கு ஆளுனர் அலுவலகத்திற்கு இன்று இ.போ..ச பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இ.போ.ச வடபிராந்திய முகாமையளர், 7 சாலை முகாமையாளர்கள், தனியார் போக்குவரத்து சபையினர், நகர அபிவிருத்தி அதிகாரசபை பிரதிநிதிகள், யாழ் மாநகரசபை முதல்வர் உள்ளிட்டவர்கள் இன்றைய கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆளுனர் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடந்தது.
கலந்துரையாடலின் போது, இ.போ.ச தொழிற்சங்கத்தினர் கூறிய கருத்துக்களை செவிமடுத்த பின்னர் ஆளுனர் தடாலடி அறிவிப்பு விடுத்ததாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
‘புதிய பேருந்து நிலையத்தில் இ.போ.ச , தனியார் சேவையை ஒன்றிணைந்து மேற்கொள்ளுமாறு ஆளுனர் உத்தரவிட்டார்.
எனினும், எமது தரப்பு கருத்தை தெரிவித்து, அப்படி ஒன்றிணைந்து சேவையை மேற்கொள்ள முடியாதென தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனால் கோபடைந்த ஆளுனர், தனது உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், உங்களை வேலையை விட்டு கலைப்பேன் என்றும், தனது உத்தரவை ஏற்றுக்கொள்ளும்வரை அந்த மண்டபத்தை விட்டு வெளியேற முடியாதென உத்தரவிட்டுவிட்டு வெளியேறிச் சென்றதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இ.போ.சவினர் மட்டும் அந்த மண்டபத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்ததாகவும், யாழ் மாநகரசபை முதல்வருடன் பேசி முடிவெடுக்கும்படி ஆளுனர் கூறிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் முதல்வருடன் கலந்துரையாடல் நடத்திய போதும், தமது முடிவில் உறுதியாக இருந்ததாகவும், சிறிது நேரத்தின் பின்னர், தாம் வெளியேறலாமென யாழ் முதல்வர் தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்தறிய, யாழ் மாநகரசபை முதல்வரை தொடர்பு கொள்ள தமிழ்பக்கம் பலமுறை முயன்ற போதும், அவர் தொலைபேசிக்கு பதிலளிக்கவில்லை.
வடக்கு ஆளுனர் அலுவலக கருத்துக்களையும் தமிழ்பக்கம் எதிர்பார்க்கிறது.