கெரவலப்பிட்டிய யுகjனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றம் இன்று நடைபெறவுள்ளது.
இதன்படி, குறித்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு முன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் குழாமின் ஏனைய நீதியரசர்கள்.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தரப்புக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரதிவாதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், அமெரிக்க நிறுவனம் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி மற்றும் சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளனர்.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை சட்டமா அதிபர் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு தனியான சட்டத்தரணிகள் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்ற அமைச்சரவை எடுத்த முடிவு நியாயமற்றது என்று மனுக்கள் கூறுகின்றன.
பங்குகளை மாற்றுவதன் மூலம் இலங்கையில் எரிவாயு உற்பத்தி செய்வதில் பிரதிவாதியான அமெரிக்க நிறுவனம் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்கும் என்றும், பங்குகளை மாற்றும் போது கடுமையான டெண்டர் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நியாயமான ஆய்வு நடத்தாமல், பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையின் முடிவை செல்லாததாக்கும் உத்தரவு பிறப்பிக்கவும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.