தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை சந்திக்க மக்கள் அச்சமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இரசாயன உர விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினால் விவசாய அமைச்சின் செயலாளரை பதவி நீக்கம் செய்வதாக ஜனாதிபதி அச்சுறுத்தியதாக குறிப்பிட்டார்.
அரச தலைவரிடம் பேசும் போது “ரசாயன உரம்” என்பது தடை செய்யப்பட்ட வாசகமாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இத்தகைய சூழ்நிலையில் படித்த உயர் அதிகாரி ஒருவர் எப்படி தனது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாய சமூகமும் ஆசிரியர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை அரச துறையினர் சம்பள உயர்வுகளை கோரி வருகின்ற போதிலும் அனைத்து கோரிக்கைகளும் செவிசாய்க்கப்படாமல் போய்விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும தெரிவித்தார்.
விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமித பண்டார தென்னகோன், முன்னைய ஆட்சியில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து குண்டுகள் வெடித்து உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தினார்.
உலகம் முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் இலங்கையால் வெசாக் பண்டிகையை கொண்டாட முடியவில்லை, இது கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக அல்ல, தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகளால் என்று பாராளுமன்ற உறுப்பினர் தென்னகோன் கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கிறித்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்குச் செல்ல முடியாத நிலையும், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ள அதேவேளை, கண்டி எசல பெரஹரா மற்றும் பொசன் பண்டிகையை பிரஜைகள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
முழு உலகமும் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் தீவிரவாத செயற்பாடுகள் காரணமாக நாடு பூட்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.