இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளிற்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பிக்கிறது.
இரண்டு போட்டிகளை கொண்ட தொடரில் ஆடுவதற்காக மேற்கிந்தித்தீவுகள் அணி இலங்கை வந்துள்ளது. இலங்கையின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலாவது டெஸ்ட் ஆரம்பிக்கிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்திலேயே நடைபெறுகிறது. இன்றைய ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கிறது.
காலி மைதானம் சுழல்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமானது என்பதால், இந்த தொடரில் இரண்டு அணிகளும் சுழற்பந்துவீச்சாளர்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
அண்மைக்காலமான அனுபவமற்ற இலங்கை அணி குறுகிய வடிவங்களில் ஆடி வரும் நிலையில், டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.
திமுத் கருணன்ரத்ன, சுரங்கா லக்மல் மற்றும் அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமல் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இடம்பெறுவர்.
இலங்கை அணி மிக்கி ஆர்தரின் பயிற்சியின் கீழ் ஆடும் இறுதித் தொடர் இது. அவரை வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை அணி முயலும்.
இலங்கை, மேற்கிந்தியஅணிகள் சமபலம் வாய்ந்த நிலையிலேயே உள்ளன. இந்த ஆண்டின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரண்டு அணிகளும் மேற்கிந்தித்தீவுகளில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடின. அவை சமனிலையில் முடிந்தன.