நெதர்லந்தின் ரோட்டர்டாம் நகரில் முடக்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர். பத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
Corona pass என்ற தடுப்பூசிச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்புற இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற கட்டுப்பாட்டைச் செயல்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடுகிறது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க நூற்றுக்கணக்கானோர் கூடினர்.
நகரின் முக்கியமான கடை வீதிகளில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவு நிலைமை கைமீறியதால் உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்த நேர்ந்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
நெதர்லந்தில் சென்ற வார இறுதியின்போது முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் சில நடப்புக்கு வந்தன.
அங்கு மீண்டும் அதிகரித்து வரும் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் 3 வாரங்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.