கோவை மாணவி தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டார். ஆர்.எஸ்.புரம், சின்மயா வித்யாலயாவில் 12-ம் வகுப்பு படித்துவந்த அந்த மாணவிக்கு, இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு ‘யாரையும் சும்மா விடக் கூடாது’ என்று அவர் மூன்று நபர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து மாணவியின் அம்மா கூறுகையில், ”அவ நல்லா படிக்கற குழந்தை. 10ஆம் வகுப்புல ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தனால, ஸ்காலர்ஷிப் கொடுத்தாங்க. சில மாசத்துக்கு முன்னாடி, ஸ்பெஷல் கிளாஸுக்காக ஸ்கூல்ல கூப்பிடறாங்கனு சொன்னா.
ஆன்லைன் கிளாஸ்தான போயிட்டு இருக்குன்னு, இங்கயே இரு பாப்பான்னு சொன்னோம். சார் கூப்பிடறாருனு சொல்லிட்டுப் போனா. இவளை மட்டும் கூட்டிட்டுப் போய் தப்பா நடந்துருக்காரு. அந்த சார் என் பொண்ணை ரொம்ப டார்ச்சர் பண்ணியிருக்கார்.
ஸ்கூல்ல என் பொண்ணு புகாரும் சொல்லியிருக்கு. ‘பஸ்ல போறப்ப இந்த மாதிரில நடக்கும்ல… அப்படி நினைச்சுக்கோ. வீட்ல சொல்லாதே’ன்னு சொல்லி, கவுன்சலிங்கலாம் கூட்டிட்டுப் போயிருக்காங்க. இது எதுமே எங்களுக்குத் தெரியாது. அங்க படிக்கப் பிடிக்கலைன்னு சொல்லி ஸ்கூல் மாறினா.
அப்பவும் நான் காரணம் கேட்டதுக்குச் சொல்லலை. இப்பதான் அவளை இவ்ளோ டார்ச்சர் பண்ணியிருக்காங்கன்னு தெரியுது. இதுக்கப்பறம் நான் பெத்த புள்ளையைப் பார்க்க முடியுமா” என்று கதறினார்.
மாணவிக்கு இயற்பியல் வகுப்பு எடுத்துவந்த மிதுன் சக்கரவர்த்தி, அவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கியிருக்கிறார்.
ஆசிரியர்தானே என்று மாணவியும் பழகியிருக்கிறார். சாட்டிங் செய்வது, பைக்கில் வீட்டுக்குக் கொண்டு விடுவது என்று இது நீண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பாலியல்ரீதியாக பேசியதுமில்லாமல், நேரில் தவறாக நடந்துகொண்டிருக்கிறார். மாணவியின் பெற்றோர் மிகவும் எளிய பின்னணியைக் கொண்டவர்கள். தந்தை டீக்கடையில் பணியாற்றுகிறார்.
விஷயம் தெரிந்து, அவர்கள் ஏதும் செய்துவிடக் கூடாது என்று மறைத்திருக்கிறார். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மிதுன், தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். மாணவி அவரிடமிருந்து விலகவும் முயன்றிருக்கிறார்.
மாணவி மிதுனுக்கு அனுப்பி வாட்ஸ்அப் உரையாடலில், ‘பேசிப் பேசி பாலியல் வரை பேச்சை வளர்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆசிரியர் என்பதால் முழுமையாக விலக முடியவில்லை. அதற்காக நான் எல்லாவற்றுக்கும் சம்மதிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இப்போதுகூட உங்களுக்கு இது தவறாகத் தெரியவில்லை. அதனால்தான் என்மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.
அதுதான் எனக்குக் கோபத்தை அதிகரிக்கிறது. என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. இயற்பியல் வகுப்பை கவனிக்கவும் முடியவில்லை. இந்தப் பள்ளியைவிட்டே செல்லுங்கள். நான் இதைப் பள்ளி நிர்வாகத்திடம் கூறவிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், மிதுன் இதற்குப் பிடி கொடுத்துப் பேசவில்லை. ஒரு பக்கம், பள்ளி நிர்வாகம் இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்று சொல்லி சாதாரணமாக விட்டிருக்கிறது. ஆசிரியர் மிதுன், மாணவி மீது குறை சொல்லி விஷயத்தை திசைதிருப்பியிருக்கிறார்.
இதனால், கடந்த சில மாதங்களாகவே மனரீதியாக பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வாகவும், தனிமையில் அழுது கொண்டும் இருந்திருக்கிறார். இந்தப் பிரச்னையிலிருந்து எப்படி வெளிவருவது என்பது தெரியாமல் கடைசியில் உயிரை மாய்த்துக்கொண்டார்.
கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பும், மாணவி வீட்டின் முன்பும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் கூடியுள்ளனர். பள்ளி முதல்வர்மீதும் நடவடிக்கை எடுத்தால்தான், மாணவியின் உடலை வாங்குவோம் என்று கூறியுள்ளனர்.