2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மேலும் 200 பேருக்கு எதிராக எதிர்காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் வீரசேகர, நௌபர் மௌலவி உட்பட 24 பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேவேளை, ஐந்து மேல் நீதிமன்றங்களில் இது தொடர்பான ஒன்பது வழக்குகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்-பார், சம்பந்தப்பட்ட வழக்குகளை இம்மாதம் முதல் தினமும் விசாரிக்கவும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனவே அரசாங்கம் விசாரணைகளை தாமதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை நிராகரித்த அமைச்சர் வீரசேகர, அதற்கான பொறுப்பு தற்போது சட்டமா அதிபருடையது எனவும் அவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், 23,700 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். எனவே இது தொடர்பான அறிக்கைகளை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்காக போரிட்டு இலங்கை இளைஞரும் உயிரிழந்ததாகவும், அத்தகைய நபர்கள் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு அடித்தளமிட்டதாகவும் அமைச்சர் வீரசேகர கூறினார்.
இதேவேளை, தாக்குதல்களின் பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹாஷிமுக்கு சம்பளம் வழங்கப்பட்டதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் ஏற்றுக்கொண்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தாம் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் சஹ்ரான் ஹாசிமிடம் இருந்து எவ்வித சேவையும் தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், 2010 ஆம் ஆண்டுக்கு பின்னரே அவரது சேவைகள் கிடைத்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல தெரிவித்தார்.