‘அன்புசெல்வன்’ பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அதனை கெளதம் மேனன் ஏற்க மறுத்துவிட்டார்.
கெளதம் மேனன் நாயகனாக நடிக்கும் ‘அன்புசெல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 3ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதனை இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த ட்வீட்டை மேற்கோளிட்டு கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கே தெரியாமல் நான் நாயகனாக நடித்துள்ள படமா” என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகப் பரவியது.
இந்த ட்வீட்டைத் தொடர்ந்து, படக்குழுவினர் கெளதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டனர். “இதனைப் போலி என்று இனியும் யாரும் மறுக்க முடியாது. தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம். ‘அன்புசெல்வன்’ படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதே இந்தக் குழப்பத்துக்குக் காரணம்” என்று தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டது.
இந்தச் சர்ச்சைகள் தொடர்பாக கெளதம் மேனன் “ஒரே ஒரு அன்புசெல்வன்தான். அது சூர்யா மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தச் சம்பவங்கள் தொடர்பாக கெளதம் மேனன், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில், “அறிமுக இயக்குநர் ஜெய் கணேஷ் இயக்கத்தில் ‘வினா’ என்ற படத்தில் நடிக்கத்தான் ஒப்புக்கொண்டேன். 2018ஆம் ஆண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு படத்தின் பணிகள் எதுவுமே நடைபெறவில்லை.
தற்போது தயாரிப்பாளர் மகேஷ் வேறொரு இயக்குநரான வினோத் குமார் என்பவருடன் இந்தப் படத்தைத் தொடங்கலாம் என்று கேட்டார். அதற்கு ஜெய் கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்துவிட்டேன்” என்று கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘அன்புசெல்வன்’ படத்தின் விளம்பரங்களை நிறுத்துமாறும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கெளதம் மேனன் கேட்டுள்ளார்.
the news is no more fake nobody can deny . ready for clarifications. Anbuselvan the movie title has been renamed this is the confusion https://t.co/Hi1pEd43f1@TheSouthMovies1 @abworldnews @News18TamilNadu @nakkheeranweb @FilmibeatTa @maalaimalar @Kalaignarnews @V_NewsTamil
— Seventymmstudios (@Seventymmstudio) November 3, 2021