மற்ற உரைகள் அனைத்தும் தவறானவை என நிலைநாட்டும் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் என்கிற தலைப்பில் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டுவிழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. இசிஐ இறையியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன்,
வள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகிறார்கள். சமீபத்திய காலத்து புள்ளிவிபரம் கூறுகிறது சைவமும் வைணவமும் ஆரியம் மதம் அல்ல. இந்தியாவில் உள்ள 108 சைவ வைணவ கோயில்களில் 106 தமிழ்நாட்டில் தான் உள்ளது. பெரும்பாலான சைவக் கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அறுபத்தி மூன்று நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள். தமிழர்கள் ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். மதங்களை உருவாக்கவில்லை.
தமிழர்கள் திராவிடர்கள் சமயம் தான் சைவ வைணவ சமயங்கள். நம் மதங்களின் மீதான ஆக்கிரமிப்பில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
கிருத்துவதற்கும் இஸ்லாத்திற்கும் எதிரான மத வெறுப்பு பிரச்சாரம் தற்போது நடைபெற்று வருகிறது. சனாதனத்தை எதிர்க்காமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. அதற்கு திருக்குறளும் ஆயுதமாக இருக்கிறது.
கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக திகழும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர். அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை எழுதியுள்ளார் என்கிற நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்கு உரியது என்று தெரிவித்தார்.