தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் நேற்று, யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதன்போது, ஐரோப்பிய நாமொன்றிலிருந்து வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பினால், பிரமுகர் ஒருவர் வியர்த்து விறுவிறுத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
திருநெல்வேலி, திண்ணை விருந்தினர் விடுதியில் இந்த சந்திப்பு நடந்தது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி ஆகியனவும் இதில் கலந்து கொண்டன. இந்த பட்டியலில் இருக்கும் ஆக இளைய கட்சி தமிழ் மக்கள் கூட்டணியும், தமிழ் தேசிய கட்சியுமே. எனினும், தமிழ் தேசிய கட்சி இளையதென்ற போதும், அதன் பிரமுகர்கள் மூத்த அரசியல்வாதிகள்.
ஆனால், தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கிய பிரமுகர்கள் பலர் அரசியலுக்கு புதியவர்கள். அரசியல்வாதிகளிற்கான நெளிவு சுளிவுகளில் கொஞ்சம் பலவீனமானவர்கள்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று கூட்டத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக பேராசிரியர் சிவநாதன் கலந்து கொண்டார். அவரும் செயற்பாட்டு அரசியலுக்கு மிக புதியவர்.
நேற்று கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அவருக்கு டென்மார்க்கிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கூட்டத்திலிருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டுமென்றும், இந்த கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கலந்து கொள்ளக்கூடாதென்றும் கடும் தொனியில் எச்சரித்துள்ளார் மறுமுனையில் பேசியவர்.
இந்த எச்சரிக்கையால் பேராசிரியர் சிவநாதன் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார்.
எனினும், கூட்டத்திலிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.