இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்தித்து பேச ஏற்பாடு செய்து தருமாறு, கொழும்பிலுள்ள இந்திய தூதரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 29ஆம் திகதி, கொழும்பில் இரா.சம்பந்தன் வசிக்கும் அரச வீட்டில், இந்தியத் தூதர் கோபால் பாக்ளேயுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்தித்து பேச ஏற்பாடு செய்து தர வேண்டுமென, இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தை டில்லிக்கு தெரியப்படுத்தி, அதன் பதிலை விரைவில் அறியத்தருவதாக இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்தியாவிற்கு அழைத்து, இந்தியப் பிரதமருடன் சந்திப்பை நடத்தும் ஏற்பாட்டை, இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டிருந்தது.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் கோபால் பாக்ளே, இந்த தகவலை இரா.சம்பந்தனிடம் தெரிவித்திருந்தார். எனினும், அடுத்த சில நாட்களில் இலங்கை தமிழ் அரசு கட்சி பிரமுகர் ஒருவர் ஊடாக, தகவல்கள் ஊடகங்களிற்கு கசிந்தது.
மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டு விபரங்கள் வெளியில் கசிந்ததால் இந்திய வெளிவிவகார அமைச்சு மிக அதிருப்தியடைந்து, அந்த ஏற்பாடுகளை தள்ளி வைத்தது.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகம், இரா.சம்பந்தனிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், மீண்டும் இந்திய பிரதமரை சந்திப்பதற்கான கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ளது.