ஐ.சி.சி உலகக்கிண்ணப் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், தென்னாபிரிக்காவிற்கு எதிராக இலங்கை 142 ஓட்டங்களை பெற்றது.
போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கையணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 20 ஆக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. குசல் பெரேரா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சரித் அசலங்க 21 ஓட்டங்களை பெற்றார். இதுவே இலங்கை தரப்பில் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள்.
பானுக ராஜபக்ச 0, அவிஷ்க பெர்னாண்டோ 3, ஹசரங்க 4, தசுன் சானக 11 என ஆட்டமிழந்தனர். பின்னால் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும், தொடக்க வீரர் பதும் நிசங்க ஒரு முனையில் அதிரடியாக ஆடினார். 58பந்துகளில் 3 சிக்சர்கள், 6 பௌண்டரிகளுடன் 72 ஓட்டங்களை குவித்து, 8வது விக்கெட்டாக வீழ்ந்தார்.
பந்துவீச்சில் தப்ரேஸ் ஷம்சி 4 ஓவர்கள் வீசி 17ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பிரிட்டோரியஸ் 3 ஓவர்கள் வீசி 17ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதேவேளை இந்த ஆட்டத்தில் தென்னாபிரிக்காவின் விக்கெட் கீப்பர் குயின்டன் டீ கொக் களமிறங்கினார். இனவெறிக்கு எதிராக முழந்தாளிட மறுத்து நியூசிலாந்துடனான ஆட்டத்தில் களமிறங்க மறுத்த கொக், இன்று களமிறங்கினார்.
போட்டி ஆரம்பிப்பதற்கு முன், கொக் முழந்தாளிட்டார்.