ஆர்யன் கான் வீடு திரும்பும் வரை வீட்டில் இனிப்பு உணவுகள் தயாரிக்க வேண்டாமென ஷாருக்கானின் மனைவி கவுரி கான் கூறியுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கடந்த 3ஆம் திகதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்திருக்கிறது. தீர்ப்பு 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஆர்யன் கைதால் அவரது பெற்றோர் மனதளவில் உடைந்து போய் இருக்கின்றனர். எந்தவித நிகழ்ச்சியிலும் ஷாருக்கான் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். படப்பிடிப்புகளையும் ஒத்தி வைத்திருக்கிறார். தீபாவளிக்குள் ஆர்யன் ஜாமீனில் விடுதலையாகி விடுவார் என்று ஷாரூக்கான் குடும்பம் நம்புகிறது. பக்ரீத் மற்றும் தீபாவளிக்காக ஆர்யன் கான் குடும்பத்தினர் வீடு முழுக்க அலங்கார மின்சார விளக்குகள் பொருத்தியிருக்கின்றனர்.
ஆனால் மின் விளக்கு ஓன் செய்யப்படாமல் இருக்கிறது. மகன் ஜாமீனில் வெளியில் வரவேண்டும் என்பதற்காக நவராத்திரியின் போது கவுரி கான் நோன்பு இருந்து பூஜைகள் செய்திருக்கிறார்.
சமையல்காரர்கள் மதிய உணவுக்காக சாப்பாட்டுடன் பாயாசமும் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த கவுரி கான் உடனே பாயாசம் செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆர்யன் சிறையில் இருந்து வெளியில் வரும் வரை எந்த வகையான இனிப்பையும் செய்ய வேண்டாம் என்று சமையல்காரர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
தனது மகனின் நண்பர்கள் கவுரி கானுக்கு போன் செய்யும்போது ஆர்யனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்படி கவுரிகான் கேட்டுக்கொண்டார்.
கவுரி கான் தனது மகன் கைது செய்யப்பட்டு இருப்பதால் மிகவும் உடைந்து போய்விட்டதாக அவரது தோழிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஷாருக்கான் தனது பாலிவுட் நண்பர்களிடம் வீட்டிற்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேசமயம் அனைவரிடமும் ஷாருக்கான் போனில் தொடர்பில் இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் தனது மகன் கைது விவகாரத்தில் விசாரணை ஏஜென்சிக்கு ஷாருக்கான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.