பாடசாலைகள் திறக்கப்பட்ட பிறகு பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் அச்சுறுத்தப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் பயப்படாமல் பாடசாலைகளுக்குத் திரும்புமாறு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வேலைநிறுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பலரும் கட்டாயப்படுத்தப்படுவதாக ஆசிரியர்கள் தனக்கு அறிவித்ததாக கூறினார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு அரசு சலுகைகளை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், 20 வருடங்களாக இந்த பிரச்சனைகள் நிலவி வந்திருந்தால் ஏன் தொழிற்சங்கங்கள் இதுபோன்ற வேலைநிறுத்த நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும், பல வெளிநாட்டவர்கள் வேலை இழந்து வீடு திரும்புவதாகவும் அமைச்சர் வீரசேகர கூறினார்.
எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயக உரிமை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், தற்போதைய நடவடிக்கைகள் நியாயமானதா என்று கேள்வி எழுப்பினார்.