திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த தாயும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம், யாழ் மாவட்டத்தின் நாவற்குழி பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை இடம்பெற்றது.
நாவற்குழி மேற்கிலுள்ள வீடொன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடர்கள், வீட்டிலிருந்த தாயையும், மகனையும் கொடூரமாக தாக்கி கட்டி வைத்துள்ளனர். திருடர்களின் தாக்குதலில் 17 வயதான மகனின் கை உடைந்தது. 42 வயதான தாயின் தலை உடைந்தது.
அதிகாலை 4 மணி வரை வீட்டில் தங்கியிருந்து தேடுதல் நடத்திய திருடர்கள், பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அயலவர்களால் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அவர்களை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பம் வறுமை நிலையில் இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கவரிங் தோடு மட்டும் அணிந்துள்ளார். தாயையும், மகனையும் கட்டிவைத்து, நகைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்கள் என கேட்டே திருடர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
வீட்டிலிருந்த 2,500 ரூபா பணம், கைத்தொலைபேசியையே திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.