கொரோனா தொற்றிற்குள்ளான தனது மனைவியை கொன்று விட்டு, கொரோனா தொற்றினால் உயிரிழந்தார் என கூறி நாடகம் ஆடி, சடலத்தை தகனம் செய்ய முயன்ற கணவன் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.
மனைவியை கொன்று, சொத்துக்களை கைப்பற்றிய பின்னர், கள்ளக்காதலியை திருமணம் செய்ய திட்டமிட்ட வர்த்தகர் இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
பொரலஸ்கமுவ பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
45 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தம்பதிக்கு 13, 6 வயதான பிள்ளைகள் உள்ளனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15ஆம் திகதி இரவு, பெண்ணின் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய கணவன், அவர் படுக்கையில் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. வைத்தியர்கள் பிசிஆர் சோதனைக்கு பரிந்துரைத்தனர். சோதனையில் கொரோனா தொற்று மீள உறுதியானது.
இதற்குள், சடலத்தை வைத்தியசாலைக்க கொண்டு சென்ற போது கணவனின் நடத்தையில், இறந்தவரின் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. சடலத்தின் கழுத்து பகுதியில் நகக்கீறல்கள் காணப்பட்டதாகவும், சட்டை கொலரினால் அதை கணவன் மறைத்ததாகவும் சகோதரியினால், பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டது.
சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த கல்கிசை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பரிசோதனையில் அவர் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, கணவனான வர்த்தகரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், தலையணையினால் மனைவியின் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொன்றதை ஏற்றுக்கொண்டார்.
கள்ளக்காதலியை திருமணம் செய்ய இந்த கொலையை நடத்தியதை ஏற்றுக்கொண்டார். மனைவியின் பெயரிலுள்ள சொத்துக்களை கைப்பற்றிய பின்னர் அவர் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.