கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரம் முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கட்டுமானத் தளங்களில் வேலைகளை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கட்டுமானத் துறை ஊழியர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட்டுக்கொண்டாக வேண்டும் என்று விக்டோரியா மாநில அரசாங்கம் முன்பே கூறியிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, திங்கட்கிழமையன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இதையடுத்து நகரம் முழுவதும் கலகத் தடுப்பு போலிஸ்காரர்கள் களமிறக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க பொலிசார் ரப்பர் குண்டுகளையும் மிளகுத் தெளிப்பானையும் பயன்படுத்தினர்.
கட்டுமான ஊழியர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீப்பந்தங்களோடு முழக்கமிட்டவாறு சென்ற அவர்களைக் கலகத் தடுப்பு போலிசார் பின்தொடர்ந்து செல்வதைக் சமூக ஊடக காணொளிகள் காட்டுகின்றன.
வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில போலிஸ் துறை தெரிவித்துள்ளது.
கட்டுமானத் தளங்களை இப்படி வலுகட்டாயமாக மூடுவது அவுஸ்திரேலியாவின் பொருளாதார நடவடிக்கைகளை மோசமாக்கும் என்றும் நீட்டிக்கப்படும் முடக்கநிலை உத்தரவுகள் நாட்டின் பொருளாதாரத்தை இரண்டாவது மந்தநிலைக்குத் தள்ளக்கூடும் என்றும் பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
விக்டோரியாவில் நேற்று 603 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இவ்வாண்டில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும் இது.
பல வாரங்களாக முடக்கநிலையில் இருக்கும் சிட்னியை தலைநகரமாகக் கொண்ட நியூ செளத் வேல்ஸில் 1,022 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.