அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அழைத்து, தனக்கு முன் மண்டியிட வைத்தார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
அவர் நேற்று வெளியிட்ட ருவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர், தமிழ் அரசியல்கைதிகளை அழைத்து தனக்கு முன் மண்டியிட வைத்தார் என அவர் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகள் மண்டியிட வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்ததும் சர்ச்சையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.