சிறுவர்கள் வாரத்துக்கு 3 மணி நேரம் மட்டுமே இணையவழி விளையாட்டுக்களை (ஒன்லைன் கேம் விளையாடலாம் என்று சீனாவில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சீன அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டில், சிறுவர்கள் வாரத்துக்கு 3 மணி நேரம் மட்டுமே ஒன்லைன் கேம் விளையாடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் அமலுக்கு வரும் இந்தக் கட்டுப்பாட்டால், சிறார்-சிறுமியர் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொது விடுமுறை நாட்களிலும் மட்டும் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை ஒன்லைன் விளையாட்டுகளை விளையாடலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முந்தைய கட்டுப்பாட்டின்படி, சிறுவர்கள் தினமும் ஒன்றரை மணி நேரமும், விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் ஒன்லைன் கேம் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சீன அரசின் தற்போதைய அதிரடி அறிவிப்பு, ஒன்லைன் விளையாட்டுகளில் பெரும்பூதங்களாய் விளங்கும் அந்நாட்டின் பிரமாண்ட தொழில்நுட்ப நிறுவனங்களை பாதித்திருக்கிறது. அவற்றின் பங்கு மதிப்பு உடனடி சரிவை சந்தித்திருக்கிறது.
ஒன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறைப்படி கடைப்பிடிக்கின்றனவா என்று தீவிரமாக கண்காணிக்கவும் போகிறோம் என்று சீன அரசு எச்சரித்திருக்கிறது.