ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்டு வரும் 20 ஆண்டு கால போர் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் அண்மையில் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கன் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் என ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
ஆப்கனில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க இராணுவம் அங்கு செல்லவில்லை. அந்த நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆப்கன் தலைவா்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கா்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை.
தலிபான்களை நம்பவில்லை என்றபோதும், ஆப்கன் அரசை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ஆப்கனில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும் என்றார்.