பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக்கிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரபல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் போதிய வாய்ப்பின்மையால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என பல சூப்பர் சீரியல்களில் நடித்துள்ளார். வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஒளிப்பதிவாளர் அசோக் சின்தலாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருப்பதால் சீரியல்களில் நடிப்பதில்லை.
நடிகை ஸ்ரீதேவி அசோக், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், தனது கணவருடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அண்மையில்தான் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஸ்ரீதேவி அசோக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



