தமிழ் அரசியல் கைதிகள் பெருமளவானளவு காலம் சிறையில் இருந்து விட்டார்கள். அவர்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். என்னை கொல்ல குண்டு கொண்டு வந்த இளைஞனை சிறையில் சந்தித்தேன். அவர் 15 வருடங்கள் சிறையில் கழித்து விட்டார் என தெரிவித்துள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச, தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலம் சிறையிலிருப்பதை சுட்டிக்காட்டி, அவர்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென உரையாற்றினார்.
அதை தொடர்ந்து உரையாற்றிய போதே சரத் பொன்சேகா இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2010ஆம் ஆண்டு என்னை கைது செய்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். சிறைச்சாலையின் பின் பகுதியால் கொண்டு சென்றனர். இரவு வேளையில் என்னைக் கொண்டு சென்ற பேருந்து நிறுத்தப்பட்ட போது, தமிழ் இளைஞர்கள் அங்கு வந்து, யுத்தத்தை நிறைவு செய்த சரத் பொன்சேகாவை உள்ளுக்கு கொண்டு வருகிறார்கள். யுத்தம் செய்த எங்களை வெளியில் கொண்டு செல்கிறார்கள் என.
என்ன வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது, நீதிமன்ற ஆசனத்தில் எனது இடதுபக்கம் அமர்ந்திருந்தவர் மொரிஸ் என்ற இளைஞர். என் மீதான குண்டுத் தாக்குதலில் குண்டை கொண்டு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. நாங்கள் பல விடயங்களை பேசினோம். அவர் என்னும் அடிக்கடி தொலைபேசியில் பேசியும் வருகிறார்.
என் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதும், அரசியல் கைதிகள் பற்றிய நாமல் ராஜபக்சவின் பரிந்துரைகளிற்கு இணங்குகிறோம்.
அவர்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். 15 வருடங்களாக அந்த இளைஞன் சிறையில் இருக்கிறார். அவர்களிற்கு கிடைத்த தண்டனை போதுமென நான் நினைக்கிறேன். அவர்கள் தொடர்பாக உண்மையாக, நீதியாக அரசாங்கம் செயற்பட்டால், அந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.