பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ள போதிலும் பல சேவைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத்தின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று மாலை அறிவித்தார்.
முன்னதாக, நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, 14ஆம் திகதியுடன் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக, அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
பயணத் தடை நீட்டிக்கப்பட்ட போதிலும், உணவு விநியோக சேவைகள், பிற அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்படும் என்று இராணுவத் தளபதி கூறினார்.
மேலும், விவசாய நடவடிக்கைகள், முக்கிய கட்டுமான தளங்களின் செயல்பாடு, உர உற்பத்தி மற்றும் வாராந்த சந்தைகள் ஆகியவற்றிற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு பொருளாதார மையங்களை திறக்க அனுமதிக்கப்படும் எந்த திகதிகளில் திறப்பது என்பது சம்பந்தப்பட்ட அமைச்சுக்களால் அறிவிக்கப்படும்.