தனது மகனின் மரணகூற்று பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாகவும் மீண்டும் ஒருமுறை தனது மகனை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பில் பொலிசாரின் பிடியில் உயிரிழந்த இளைஞரின் தாயார் நீதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்ற போது இதனை தெரிவித்தார்.
கடந்த 3 ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதைபொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.
சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று தெரிவித்திருந்தார்.
‘எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன். தூக்கி போட்டு குத்தினார்கள், சுவரில் சாற்றி அடித்தார்கள், சுவர் உடைந்து போய் இருக்கு, இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’
மருத்துவ உடல்கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும். கைவிலங்கிட்ட எனது அண்ணன், ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர். உண்மை ஜெயிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அந்நிலையில் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி அறையில் நீதிபதி கருப்பையா ஜீவராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
இதன் போது, குறித்த வழக்கின் சாட்சிகள் சாட்சியம் அளிக்கும் நிலையில் தனது மகனின் மரணகூற்று பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாகவும் மீண்டும் ஒருமுறை தனது மகனை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்று உயிரிழந்தவரின் தாயார் நீதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 3ம் திகதி மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர் .
இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாரணை இடம் பெற்று வருகின்றது.
மேலும், 4ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பக்கட்டுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.