சீனாவுக்குத் தலைவணங்குகிறார்கள் என்று ஜோ பைடன் தலைமையிலான அரசை அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கலிபோர்னியாவில் நடைபெற்ற குடியரசு கட்சிக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசும்போது, “நாம் நமது தாய்நாட்டைதான் முன்னிறுத்த வேண்டும். ஆனால், இவர்கள் இரண்டாவதாக நிறுத்துகிறார்கள். நம் கண் முன்னால் நம் நாடு அழிந்து கொண்டிருக்கிறது. குற்றங்கள் நிறைய நடக்கின்றன.
எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. வெளிநாட்டு சைபர் தாக்குதல்களால் தொழில்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. பைடன் அரசில் நம் நாட்டுத் தலைவர்கள் சீனாவுக்குத் தலைவணங்குகிறார்கள். பைடன் தலைமையிலான அரசு எங்கள் குழந்தைகளைக் கீழே தள்ளுகிறது” என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ், சீனாவின் ஆய்வகத்தில் உருவானதுதான் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னர் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி 8ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பதவியேற்றார். பதவியேற்றது முதலே அமெரிக்காவுக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார் என்றும், கொரோனாவை பைடன் தலைமையிலான அரசு வெற்றி கொண்டுள்ளது என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், பைடன் அரசின் மீது ட்ரம்ப் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.