மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தழையில் கொரோனா கொடுப்பனவு நிதி பெற சென்ற இரு குடும்பங்களைச் சேர்ந்த பெண் உறவினர்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று கருங்காலிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் பணத்தினை பெற்று வீடு திரும்பும் வழியில் இரு சாராருக்குமிடையில் முன்னைய விரோதம் தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
அதில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
கடந்தகாலம் இவர்களுக்கிடையே இடம்பெற்ற இவ்வாறதொரு சம்பவத்தில் குறித்த குடும்பத்தினைச் சேர்ந்தோர்கள் அவ்விடத்தில் வசிக்காமால் அச்சம் காரணமாக அவ்விடத்தினை கைவிட்டு இடம்பெயர்ந்து வேறு இடத்தில் சென்று வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று கல்குடா பொலிசார் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இரு வெவ்வேறுபட்ட வழக்கினை பதிவு செய்திருந்தனர்.
வீடு உடைப்பு தொடர்பாக 3 நபர்கள் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் வாசஸ்த்தலத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
குறித்த வழக்கின் விபரங்கள் மற்றும் சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல கட்டளை பிறப்பித்துள்ளார்.
இதன் வழக்கு 22.7.2021 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வீதியில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக இரு தரப்பினரையும் சேர்ந்த 5 பேர்கள் கைது செய்யப்பட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இரு சாராருக்குமிடையில் பிணக்கினை சமாதன முறையில் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். பலனளிக்காத காரணத்தினால் மத்தியஸ்த்த சபைக்கு பிணக்கு மாற்றப்பட்டது.
பயணத்தடை விதிக்கப்பட்ட இக்காலப் பகுதியில் அமைதியான சூழல் நிலவுகின்ற வேளை இச்சம்பவம் பிரதேச மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் இதே குடும்பத்தைச் சேர்ந்தோர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடு பல்வேறு காரணங்களை கொண்டமைந்து விஸ்வரூபமெடுத்தது.
இதேவேளை ஊர் மக்களும் வீட்டை விட்டு இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு நீதி வேண்டி இவ் விடயத்தில் பங்கெடுத்தனர். அதனை தொடர்ந்து பொலிசாருக்கும் ஊர் மக்களுக்குமிடையில் கலவரம் ஏற்பட்டது. பொலிசாரின் வாகனக் கண்ணாடி உடைக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.
அது தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை மீண்டும் இவ்வாறதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை கிராம மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவர்களிடையே அடிக்கடி இடம்பெறும் சம்பவத்திற்கு முற்றுபுள்ளி வைக்க பொலிசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்கின்றனர்.