Site icon Pagetamil

ஊரடங்கை மீறி ஹாயாக சுற்றி திரிந்த நட்சத்திர காதலர்கள்: வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அத்தியாவசியத் தேவைகளுக்கு மக்கள் வெளியே வரலாம். 2 மணிக்கு மேல் எந்த தேவையும் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது.

இந்நிலையில் மும்பையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி காரில் உலா வந்ததாக நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது செய்யப்பட்டுள்ளனர். பாந்த்ரா பகுதியில் டைகர் ஷ்ராப் வசித்து வருகிறார். இவரும், நடிகை திஷா படானியும் காதலித்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டுகிறது. இருவரும் ஜிம்முக்கு சென்று விட்டு வரும் வழியில் பந்த்ஸ்டாண்ட், பாந்த்ரா பகுதியில் காரில் வலம் வந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த காவல் துறையினர் இவர்கள் இருவரும் வந்த காரை வழிமறித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது இருவரும் அத்தியாவசியத் தேவை இன்றி அந்தப் பகுதியைச் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டின் விதிகளின் படி நடிகர்கள் இருவரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல் துறையினர்.

188 சட்டப் பிரிவின் கீழ் டைகர் ஷ்ராஃப், திஷா படானி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மும்பை காவல்துறை தரப்பு, ‘வார்’, ‘மலங்’, ‘ஹீரோபந்தி’ படங்களில் என இவர்கள் நடித்த படங்களின் தலைப்புகளைப் பயன்படுத்தி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

அதில், ‘தொற்றுக்கெதிரான போர் நடந்து கொண்டிருக்கும் போது, பாந்த்ரா வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இரண்டு நடிகர்கள் மீது காவல்துறையினரால் வழக்குப் பதியப்பட்டுள்ளது. கோவிட்-19ல் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு எதிராகத், தேவையில்லாத ஹீரோ வேலைகளைக் காட்ட வேண்டாம் என்று மும்பைவாசிகளைக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version