ஈரானிய கடற்படையில் மிகப்பெரிய கப்பல் தீப்பற்றி இன்று புதன்கிழமை ஓமான் வளைகுடாவில் மூழ்கியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கார்க் என்ற கப்பலே மூழ்கியுள்ளது.
அதிகாலை 2:25 மணியளவில் கப்பல் தீப்பிடித்தது, தீயணைப்பு வீரர்கள் அதைக் கட்டுப்படுத்த முயன்றனர் என்று அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அரேபிய வளைகுடாவின் – ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஓமான் வளைகுடாவில் தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 1,270 கிலோமீட்டர் (790 மைல்) தொலைவில் ஈரானிய துறைமுகமான ஜாஸ்க் அருகே கப்பல் மூழ்கியது,
லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்த மாலுமிகள் தீப்பிடித்த கப்பலை விட்டு வெளியேறும் புகைப்படங்கள் ஈரானிய சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.
அரச தொலைக்காட்சி கார்க்கை ஒரு “பயிற்சி கப்பல்” என்று குறிப்பிடுகின்றது.
ஈரானிய கடற்படையின் விநியோக கப்பல்களில் ஒன்றாக கார்க் செயல்படுகிறது. இது கனரக சரக்குகளை கொண்டு செல்வதுடன், ஹெலிகொப்டர்களுக்கான ஏவுதளமாகவும் செயல்படும்.
ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், பிரிட்டனில் கட்டப்பட்டு 1977 இல் இயங்க ஆரம்பித்த இந்தக் கப்பல் 1984 இல் ஈரானிய கடற்படையில் இணைக்கப்பட்டது.
கார்க் மூழ்கியது ஈரானிய கடற்படைக்கு பேரிழப்பாக குறிப்பிடப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் ஈரானிய இராணுவப் பயிற்சியின் போது, ஜாஸ்க் துறைமுகத்திற்கு அருகே ஒரு ஏவுகணை தவறாக ஒரு கடற்படைக் கப்பலைத் தாக்கி, 19 மாலுமிகளைக் கொன்றது மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.
மேலும் 2018 ஆம் ஆண்டில், ஈரானிய கடற்படை கப்பலொன்று கஸ்பியன் கடலில் மூழ்கியது.



