காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திங்கட்கிழமை (31) எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 14 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர், நுளம்பு தடுப்பு பிரிவினர்கள் ஆகியோர் இணைந்து காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் உள்ள மைதானங்கள், பொது இடங்கள் மற்றும் வீதியில் உலாவித் திரிந்தோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர், சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், பொலிஸார் என 102 பேருக்கு மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையில் 14 நபருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றின் பாதிப்பு கிழக்கிலும் அதிகமாக உள்ளதனால் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றுவதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.