கூடலூர்- கேரள மலைப்பாதையில் விபத்து ஏற்பட்டு சாலை ஓரத்தில் சுவாசம் நின்ற நிலையில் உயிருக்குப் போராடிய ஓட்டுனரை அவ்வழியே சென்ற தமிழக காவல்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் காப்பாற்றி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து கோளா நோக்கிச் மலைப்பாதையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த கேரள மாநில பிக்கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் அபிலாஷ் என்பவர் சுயநினைவை இழந்து உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார். அப்போது அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக நீலகிரி மாவட்ட க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் திரு. சத்யமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் திரு.மரைக்காயர் ஆகியோர் ரோந்துப் பணிக்கு சென்றுள்ளனர்.
சம்பவத்தை பார்த்த இவர்கள் துரிதமாக செயல்பட்டு மார்பில் கைகளால் அழுத்தம் கொடுத்து சிபிஆர் எனும் உயிர்காப்பு முறையின் மூலம் அவரை உயிர்பிழைக்கச் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள பூக்கோட்டும் பாடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கேரளா உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கையில் விபத்துக்குள்ளானவர் பெயர் அபிலாஷ் என்றும் அவர் பாலக்காடு கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்தவரென்றும் தெரியவந்தது.
சிபிஆர் உயிர்காப்பு முறையில் துரிதமாக ஓட்டுநரின் உயிர்காத்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக கேரளாவில் இந்த ஒளிப்பதிவு காட்சி பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இளைஞரின் உயிரை மீட்டெடுத்த இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி அவர்களுக்கும் சப் இன்ஸ்பெக்டர் மரைக்காயர் அவர்களுக்கும் சமூக வலைத்தலங்களிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறை வட்டாரத்திலும் பாராட்டுகள் குவிந்தவண்ணமுள்ளன.