யாழ் மாவட்டத்தில் நாளை 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நாளை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 50,000 சினோஃபார்ம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களிற்குள் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் 11 தெரிவு செய்யப்பட்டு, அதிலுள்ள 61 கிராம சேவகர் பிரிவுகளிற்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.
ஊர்காவற்துறை, உடுவில், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அண்மைய மாதங்களில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாததையடுத்து, அந்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை தவிர்த்து, மாவட்டத்திலுள்ள ஏனைய 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50,000 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது.
நாளை 12 கிராம சேவகர் பிரிவுகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளது.
ஒரு வாரத்தில் யாழ் மாவட்டத்தில் 50,000 தடுப்பூசிகள செலுத்தப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.