காசா பகுதியில் 11 நாள் இராணுவ நடவடிக்கையை நிறுத்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தாக்குதலை நிறுத்த அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்தின் பின்னர் இந்த முடிவு வந்தது.
முன்னதாக ஹமாஸ் அமைப்பும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதன்மூலம், 11 நாள் கொடூர மோதல் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேலும் ஹமாஸும் வெள்ளிக்கிழமை (2300 GMT வியாழக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு “பரஸ்பர மற்றும் ஒரே நேரத்தில்” காசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொண்டனர்.
எகிப்திய அதிகாரி ஒருவர் தன்னை வெளிக்காட்டாமல் சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய தகவலில், காசாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக இஸ்ரேல், தமது அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது என முன்னதாக தெரிவித்திருந்தார்.
எகிப்தின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் தொலைபேசியில் பேசிய சிறிது நேரத்திலேயே அந்த அதிகாரி பேசினார். பாலஸ்தீனிய பிரதேசங்களில் வன்முறையைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக அல் சிசியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி, போர்நிறுத்தத்தை நோக்கிய நகர்வு பற்றிய அறிக்கைகள் “தெளிவாக ஊக்கமளிப்பதாக” கூறினார். “மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய அமெரிக்கா முயற்சிக்கிறது” என்று அவர் கூறினார்.
காசா முனையில் 11 நாட்களாக நடந்த தாக்குதலில் 263 பேர் உயிரிழந்தனர். காசா முனையில் குழந்தைகள், பெண்கள் உள்பட 227 பேரும், மேற்குகரை பகுதியில் 24 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் (இந்தியாவின் கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர்.