31.3 C
Jaffna
March 28, 2024
இந்தியா

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவர்களிற்கு தூக்கு: தமிழ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு!

உத்தரப் பிரதேசத்தில் 16 வயதுச் சிறுமி கூட்டு பலாத்காரத்திற்குப் பின் கொலையான வழக்கில் போக்சோ நீதிமன்றம் மூவருக்குத் தூக்கு தண்டனை விதித்துள்ளது. மிகவும் சிக்கலான இவ்வழக்கைத் திறமையுடன் புலனாய்வு செய்த ஐபிஎஸ் தமிழருக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

புலந்த்ஷெஹரில் கடந்த ஜனவரி 2, 2018இல் பள்ளிக்குச் சென்ற 16 வயதுச் சிறுமி காணாமல் போனார். கொலை செய்யப்பட்ட நிலையில் மறுநாள் அவரது உடல் அருகிலுள்ள தாத்ரியின் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான தடயங்களும் புலந்த்ஷெஹர் காவல்துறையினருக்குக் கிடைக்காததால் எவரும் கைதாகவில்லை. இதனால், உ.பி. அரசு மீது பெரும் சர்ச்சை கிளம்பி, பலரும் அந்நகரில் தம் பெண் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புவதை நிறுத்தினர்.

எனவே, அப்போது அம்மாவட்ட எஸ்.பி.யாக இருந்த தமிழரான ஜி.முனிராஜ் ஐபிஎஸ் நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரித்தார். இதில், தாத்ரி செல்லும் வழியிலிருந்த சுங்கச்சாவடி சிசிடிவியில் ‘அப்பாஸி பாய்ஸ்’ என வித்தியாசமாக எழுதப்பட்ட ஒரு பைக் கடந்திருந்தது சந்தேகத்தை எழுப்பியது.

இதையடுத்து பைக் உரிமையாளர் ஜுல்பிகார் அப்பாஸி (20) விசாரிக்கப்பட்டார். அதில், தன் நண்பர்களான தில்ஷாத் அப்பாஸி (21), ஜுல்பிகார் (22) ஆகிய மணமான நண்பர்களுடன் இணைந்து பாலியல் கூட்டு பலாத்காரம் செய்ததாக ஒப்புக் கொண்டார்.

அன்று மாலை, மது அருந்திய பின்பான போதையில் மகிழ்ச்சியாக இருந்தபோது சைக்கிளில் சென்ற அச்சிறுமி கண்ணில் பட்டுள்ளார். அவரை காரில் பிடித்து மறைவான இடத்தில் கூட்டு பலாத்காரம் செய்தபின், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்றதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவர்கள் பயன்படுத்திய காரில் அப்பெண்ணின் ஒரு செருப்பு மற்றும் தலைமுடி ஆதாரங்களாகச் சிக்கியதால் கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்டனர். கடந்த மூன்று வருடங்களாக புலந்த்ஷெஹரின் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.

மொத்தம் 14 சாட்சியங்களுடனான இவ்வழக்கில், மூவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன. ஐபிசி 176 டி, 346 மற்றும் 302 ஆகிய பிரிவுகளில் தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

இதை வழங்கிய கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பராஷார் தனது தீர்ப்பில், “பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் (மகளை காத்து வளர்த்துங்கள்) எனும் கொள்கையை அறிவித்த அரசு அவர்கள் மீதான குற்றங்களில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற செயல்களினால் பெண்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சுவார்கள். இக்குற்றத்திற்காகக் கடுமையான தண்டனையை வழங்காவிட்டால் நீதிமன்றங்களின் நிலைப்பாடுகள் மீது சமூகம் கேள்வி எழுப்பும்“ எனக் குறிப்பிட்டார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புலந்த்ஷெஹரின் இவ்வழக்கில்தான் மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலியான பெண்ணின் தந்தை கூறும்போது, “பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை போலீஸாரால் நம்பாமல் பல வழக்குகள் திசை திரும்பி உண்மையான குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். கொஞ்சம் கூடத் துப்பு கிடைக்காத நிலையில் எங்கள் தரப்பு சந்தேகத்தைப் பொறுமையுடன் கேட்டு நடவடிக்கை எடுத்த எஸ்.பி. முனிராஜை எங்கள் வாழ்க்கையில் மறக்க மாட்டோம்.

தீர்ப்பு வெளியானவுடன் தற்போது அலிகரில் எஸ்எஸ்பியாக இருக்கும் அவருக்கு உடனடியாக போனில் நன்றி தெரிவித்தேன். தொடர்ந்து அவர் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து கொடுத்த தைரியமும் மிகவும் உதவியாக இருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்“ எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் 2009ஆம் வருட ஐபிஎஸ் அதிகாரியான முனிராஜ் தருமபுரியின் அ.பாப்பாரப்பட்டி கிராம விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பல்வேறு அதிரடி நடவடிக்கைளால் தமிழரான முனிராஜை இம்மாநிலப் பொதுமக்கள், ‘உ.பி. சிங்கம்’ என்றழைக்கப்படுவது நினைவுகூரத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment