உலகில் இதற்குமுன் இல்லாத அளவில் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு உச்சத்தை எட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதும் ‘ஐவிஎஃப்’ போன்ற மருத்துவத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வதுமே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இப்போது, ஆண்டுதோறும் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள் பிறப்பதாக ‘ஹியூமன் ரீபுரொடக்ஷன்’ எனும் அறிவியல் சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது. அதாவது, 42 குழந்தைகளில் ஒன்று இரட்டையர்களில் ஒருவராகப் பிறக்கிறது.
1980களின் நிலைமையை விடவும், இப்போது இரட்டையர் பிறப்பு மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருக்கிறது.
2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை 165 நாடுகளில் பதிவான இரட்டையர் பிறப்பு விகிதத்தைச் சேகரித்து, அதை 1980-1985 காலகட்டத்துடன் ஆய்வாளர்கள் ஒப்புநோக்கினர்.
அதன்படி, முன்பு ஆயிரத்திற்கு ஒன்பது பிரசவங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 12ஆக அதிகரித்திருக்கிறது.
இப்போதைக்கு, உலகில் பிறக்கும் இரட்டையர்களில் கிட்டத்தட்ட 80 வீதமானவர்கள் ஆசிய, ஆபிரிக்க கண்டங்களைச் சேர்ந்தவர்கள் என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.