தனது வாகனத்தில் பயணித்த பெண்களின் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டார் என்று பல பெண்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட போலி வாடகை வாகனச்சாரதி அவுஸ்திரேலியாவில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான தகாத நடத்தை உட்பட 18 பாலியல் குற்றங்கள் பொலிஸாரினால் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
2018 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக்கூறப்படும் இந்தச்சம்பவங்கள் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக பிரிஸ்பன் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் முடிவில் குறிப்பிட்ட நபரை குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ள ஜூரிகள், இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளனர்.
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட சமரநாயக்க (44), தன்னை வாடகை வாகன சாரதியாகக்கூறி பிரிஸ்பனில் இரவுவேளைகளில் இளம்பெண்களை தனது வாகனத்தில் ஏற்றினார் என்றும் வாகனத்துக்குள் ஏறிய பெண்களிடம் தகாத நடவடிக்கைகளிலும் பாலியல் துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
குறிப்பிட்ட நபர் 2010 ஆம் ஆண்டு ஏற்கனவே, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு எதிராக தகாதவகையில் தன்னை வெளிப்படுத்தினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு மூன்றுவருட சிறைத்தண்டனையை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதையடுத்து, இவருக்கு எதிரான தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், இவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.