ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில், இலங்கை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலிருந்து கட்டாய தகன விவகாரத்தை நீக்கும்படி, அணுசரனை வழங்கும் நாடுகளை இலங்கை கோரியுள்ளது.
ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர தூதர் சந்திர பிரேம இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுடனான முறைசாரா கலந்துரையாடலில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கட்டாய தகன கொள்கை மாற்றப்பட்டு விட்டதால், இந்த விவகாரம் இப்பொழுது செயலிழந்து விட்டது என இலங்கை கூறுகிறது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இலங்கை இந்த வாரம் அனுமதித்தது.
இதேவேளை, இலங்கை இராணுவமயமாகும் விடயத்தையும் அவர் கடுமையாக நிராகரித்தார். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளில் சிலர், அரச நிர்வாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளார். அவர்களில் சிலர் இராணுவத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனியார் துறையில் பணிபுரிந்தவர்கள். அவர்களை அரசாங்கத்தில் பணியாற்ற தெரிவு செய்ய உரிமை என்று கூறினார் .
மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்த எச்சரிக்கைகள் குறித்த கூற்று மிகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவும், ஊகமாகவும் இருந்தது என்றும் இலங்கை வாதிட்டது.
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளால் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும், அது சுயாதீனமானது அல்ல என்றும் சந்திரபிரேம குற்றம் சாட்டினார்.