முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட வடகாடு கிராமத்தில் அரச காணியினை தனிநபர் ஒருவர் காடழித்து ஆக்கிரமித்து வருவது சம்மந்தாக வடகாடு மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமது கிராமத்தில் ஒன்றுகூடி பேருந்தில் மாந்தைகிழக்கு பிரதேச செயலகம் சென்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன் தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதுடன் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி நவரட்ணம் ரஞ்சனா அவர்களிடம் மனு ஒன்றினை கையளித்து தங்கள் கோரிக்கையினை தெரிவித்துள்ளார்கள்.
தனி நபர் ஒருவர் சுமார் நூறு ஏக்கர் அரசகாணியினை அபரித்து வருவதாக வடகாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்காக காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்க பலதடவைகள் கோரிக்கை விடுத்தும் வெளிகிராமத்தில் இருக்கும் தனி நபர் ஒருவர் இந்த காணியினை அத்துமீறி அபகரித்து வந்துள்ளதுடன் காடுகளும் அழிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிராம மக்களுக்கும் காணி அபகரிப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் தாக்குதல் வாள்வெட்டாக மாறிய நிலையினை தொடர்ந்து குறித்த காணிக்கு செல்லும் பகுதியில் இன்று இரண்டு பொலீசார் வருகை தந்து கிராம மக்கள் சிலரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்
போராட்ட காரர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்-
இந்த காணி தொடர்பில் அ படிவம் ஒட்டப்பட்டு அதனை மீறியும் காணி அபகரிப்பு தொடர்ந்த நிலையில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த நபர் வெளிப்படுத்தல் உறுதியினை காட்டினார். அது அரச காணி என்பது தொடர்பில் தெரிவித்துள்ளோம்.
அரசகாணி ஆக்கிரமிப்பு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து பிரதேச செயலர் என்ற ரீதியில் பலதரப்பில் இருந்தும் அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்னை இந்த பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று எனக்கு எதிராக முறைப்பாடு எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இதில் ஒரு குறுப்பாக சேர்ந்து சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள் இருப்பதாக படுகின்றது. எங்களுக்கு அழுத்தங்கள் இருக்கின்றது.
இது தொடர்பில் சமூகத்தின் ஒற்றுமை கருதி நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை யாரும் காணியில் இறங்காதவாறு தடைசெய்ய நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தடை உத்தரவு எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அரசகாணி முகாமைத்துவம் கஸ்ரமான விடயம். பல பிரச்சனைகள் உள்ளன. தனியார் காணி என்று அவர்கள் உறுதிப்படுத்தினால் அது நீதிமன்றத்தினால் வழங்கப்படும். இதற்கு முன்னர் சம்மந்தப்பட்டவர்கள் அழுத்தங்களை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
நான் பிரதேச செயலாளராக வருவதற்கு முன்பே இடம்பெற்ற தவறுகளை கூட எல்லா பிரச்சனையினையும் நான் தான் செய்தேன் என்று வீண் பழிகள் சுமத்தி அமைச்சுக்களுக்கு திணைக்களங்களுக்கு,அரசியல் பிரமுகர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.
நீதிமன்ற முடிவு வரும் முன்னரே பிரதேச செயலாளருக்கும் பிரதேச செயலக நிர்வாகத்திற்கும் குழப்பம் கொடுக்கின்றார்கள் என்னை இங்கிருந்து மாற்றம் செய்யவேண்டும் என்று அந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள் என்கிறார்.

