புதிய கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புளோரிடாவில் நடந்த அரசியல் நிகழ்வு ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது,
“நீங்கள் என்னைத் தேடினீர்களா? நான் புதுக் கட்சியைத் தொடங்கப் போவதில்லை. குடியரசுக் கட்சிக்கு மாற்றாக நான் எந்தக் கட்சியையும் தொடங்கப் போவதில்லை. நாம் இன்று கூடியிருப்பது நமது எதிர்காலத்தையும், நமது நாட்டின் எதிர்காலத்தையும், நமது கட்சியின் எதிர்காலத்தையும் பற்றிப் பேசுவதற்குத்தான்.
நவீன வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் பெற்றிராத மிக மோசமான முதல் மாதத்தை ஜோ பைடன் பெற்றுள்ளார். புதிதாகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகம், வேலைவாய்ப்புகளுக்கு எதிரானது, குடும்பங்களுக்கு எதிரானது. அறிவியலுக்கு, பெண்களுக்கு எதிரானது” என்று பேசினார்.
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு, ட்ரம்ப் கலந்துகொள்ளும் முதல் அரசியல் நிகழ்வு இதுவாகும்.