ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தில் காதலனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தரம் 11 மாணவி உயிரிழந்துள்ளார். காதலன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அலரி விதையினை உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று (23) மரணமடைந்தார்.
கந்தசாமி அனுசியா (16) என்ற மாணவியே உயிரிழந்தார்.
மாணவி அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த ஒரு வடருடங்களாக காதலித்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை இந்த ஜோடி தலைமறைவாகியிருந்தது.
பின்னர் இருவரும் ஜீவபுர பிரதேசத்தில் அலரி விதையினை உட்கொண்டிருந்த நிலையில் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் இருவரையும் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதித்தனர். மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று மரணமடைந்துள்ளார். மற்றையவர் அவசர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.