நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தற்கு அழைத்து வரப்பட மாட்டார் என சபாாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இன்று நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்ததும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவது குறித்து சபாநாயகர் ஒரு தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாளைய நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தது.
தற்போது அங்குணகொலபெலெச சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் எம்.பி. ராமநாயக்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினர்.
அதன்படி, சபாநாயகர் தலையிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவை கொழும்பில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தது.
ரஞ்சன் ராமநாயக்க இன்னும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார், எனவே அவரது சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கூறியது.
பதிலளித்த சபாநாயகர், எம்.பி. ராமநாயக்க தொடர்பாக ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டிருப்பதால், இந்த விஷயத்தில் மேலும் தீர்ப்பு வழங்க முடியாது என்றார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலமுறை அழைப்பு விடுத்த போதிலும், சபாநாயகரும் துணை சபாநாயகரும் இன்றைய அமர்வின் போது எம்.பி. ராமநாயக்க தொடர்பான உத்தரவை பிறப்பிக்கவில்லை.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் முன்பாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் அமைதியின்மை நிலவியது.
இதற்கிடையில், அங்குனுகொலபெலெச சிறையில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாதுகாப்பு வழங்க முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரு தனி செல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.