முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பாராதூர தன்மையை அறிந்தே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் என்னை சந்தித்து கலந்துரையாடியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு 3 , 5 ஆம் ஒழுங்கையில் உள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் கட்சி உறுப்பினர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கை பாராதூரமானதாகும். முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை இரத்து செய்யவே ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
இது குறித்து ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தியுள்ளதுடன் சட்டதரணிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை ஒன்றிணைக்குமாறு கோரப்பட்டது.
இதனடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினேன். அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கை குறித்து இதன் போது பரந்தளவில் பேசினோம் என்றார்.
இதேவேளை, அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவிற்கு எதிராக ஜேவிபி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.